Thursday, April 10, 2014

அரசியலும் தேர்தலும் தகாதவை அல்ல!- வி. சுரேஷ் நேர்காணல்




சென்னையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்புறம் அங்கிருந்து கற்பனை செய்துகொள்ளுங்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கச் சாதியினரால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துக்கான பயணத்தை அல்லது தண்டகாரண்ய வனப் பகுதியில் அரசு அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளின் குடியிருப்புக்கான பயணத்தை அல்லது அரசின் அத்துமீறலை எதிர்த்து டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காட ஒரு பயணத்தை....

பெரும்பாலும் பயணங்கள்தான் சுரேஷின் இருப்பிடம். இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்களுக்காக ஜெயப்பிரகாஷ் நாராயணனால் தொடங்கப்பட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) இன்றைய பொதுச்செயலர் சுரேஷ். இந்திய அரசு தொந்தரவாகப் பார்க்கும் மனித உரிமைப் போராளிகளில் முக்கியமானவர். இந்திய அரசியலின் உள்கூறுகளைப் பற்றி உரையாட சரியான நபர்.

இந்திராவின் நெருக்கடிநிலை இந்தியாவுக்குப் பிந்தைய இந்த 37 ஆண்டுகளில், மனித உரிமைகளுக்கான மதிப்பு இங்கே எப்படி இருக்கிறது? நாம் மேம்பட்டிருக்கிறோமா?

இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவித்தபோது, சென்னை லயோலா கல்லூரியின் மாணவன் நான். தொழிற்சங்கவாதிகளுடன் அப்போது எனக்குப் பழக்கம் இருந்தது. இந்திராவின் நெருக்கடி நிலை அறிவிப்புக்குப் பின் ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தொழிற்சங்கவாதிகள், இளைஞர்கள் நாடு முழுக்க ஆயிரக் கணக்கில் கைதுசெய்யப்பட்டு, விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை அவர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். “மாணவர்களே... இந்திய ஜனநாயகத்தை மீட்க நீங்கள் கிளர்ந்தெழுந்து போராடவில்லை என்றால், நீங்கள் படித்துப் பெறும் பட்டத்துக்கு, அது அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கு இருக்கும் மதிப்புகூட இருக்காது” என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறைகூவல் விடுத்தபோது, தனிப்பட்ட லட்சியங்கள், கனவுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டுப் போராட்டக் களத்தில் இறங்கிய எண்ணற்ற மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்திய வரலாற்றின் மோசமான கலவரங்களில் ஒன்றான 2002 குஜராத் மதக் கலவரங்களில் தொடர்புடைய மோடிதான் இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான பிரதமர் வேட்பாளர். நாம் மேம்பட்டிருக்கிறோமா?

ஜனநாயகமும், மனித உரிமைகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். தேர்தலையொட்டி எவ்வளவோ விஷயங்கள் சூடாகவும் விரிவாகவும் விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், யாராவது மனித உரிமைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறார்களா? சொல்லுங்கள்... நாம் மேம்பட்டிருக்கிறோமா?

ஆனால், மனித உரிமைகள் தொடர்பாக இன்றைய கால கட்டத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது அல்லவா?

அடிப்படை உரிமைகள் என்ன என்ற விவரம் சாமானிய மக்களையும் எட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இங்கு மனித உரிமைகளுக்கான இடம் கவலைகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நாம் அடைந்துள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் கொடுத்திருக்கும் விலை மனித உரிமைகளிலிருந்துதான் தொடங்குகிறது.

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரரீதியாகச் சுரண்டப்பட்டு, அழுத்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டே சில பணக்காரர்கள், பெருநிறுவனங்களுக்கான இந்த வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

அன்றைக்குப் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சுதந்திரம், விடுதலை, ஜனநாயகம் ஆகியவற்றில் மக்களுக்குப் பெரும் விருப்பம் இருந்தது. பெரும் ஊழல் அதிகார சாம்ராஜ்யங்களுக்கு எதிராக வீதிகளுக்கு வந்து போராட மக்கள் - முக்கியமாக மாணவர்கள் - தயாராக இருந்தார்கள். இன்றைக்குப் படிப்பறிவு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எதிர்த்துப் போராட யாரும் தயாராக இல்லை.

இன்றைய இளைஞர்களின் கனவுகளையே எடுத்துக்கொள்வோம். தங்கள் படிப்பு, வேலை, வீடு, கார் என்றுதானே அவர்களுடைய அக்கறைகள் நீள்கின்றன? நாட்டின் 80 கோடி மக்கள் பொருளாதாரரீதியாக அடிமைப்பட்டு, பசி, பட்டினி, வறுமையில் கிடப்பது எத்தனை பேரை உலுக்குகிறது? காற்றும் நீரும் நிலமும் நஞ்சாகிக்கொண்டிருக்கிறதே… இன்றைக்கு நாம் தலையிட்டு இதையெல்லாம் தடுத்து, சீரழியும் ஜனநாயகத்தையும் சரிப்படுத்தாவிட்டால் நாளை நம்முடைய சந்ததியினர் மிகவும் பயங்கரமான நாட்டில் வாழ நேரிடும் என்பதையெல்லாம் பற்றி எத்தனை பேர் கவலைப்படுகின்றனர்?

இதற்கு அடிப்படைக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?

கல்விமுறை. மக்களின் சுயசிந்தனையைத் திட்டமிட்டு அழித்துவிட்டு, தொழிலதிபர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்யும் கூலிகளாக நம் மாணவர்களை நம் கல்வி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சமூக உணர்வோ அற உணர்வோ அற்ற, சுயநலனே வளர்ச்சி என்ற உணர்வுகளைக் கொண்டவர்களாக நம் குழந்தைகளை நம்முடைய கல்விமுறை வெற்றிகரமாக உருவாக்குகிறது. நம்முடைய சிந்தனையையும் அது ஊழல் சிந்தனையாக்கிவிடுகிறது.

இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், அரசியல்வாதிகள்தான் என்று நம்புவதுகூட நம்முடைய ஊழல் சிந்தனையின் விளைவுதான். உண்மையில், நம் அறிவுச் சமூகத்தின் அத்தனை பிரதிநிதிகளும், ஊழலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்; விலைக்கு வாங்கக்கூடியவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். புகழ்வாய்ந்த நம்முடைய கல்வி நிறுவனங்கள்கூட பெரிய தொழில்நிறுவனங்களுக்குச் சாதகமாக அறிக்கைகளையும் சான்றுகளையும் போலியாகத் தயாரிக்கக்கூடியவை. ஒடிசாவில் போஸ்கோ உருக்காலையால் ஏற்படக்கூடிய விளைவுகள்குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர் குழுவில் நானும் ஒருவன். பிரபலமான சில நிறுவனங்களே போஸ்கோ நிறுவனத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சந்தேகத்துக்குரிய வகையில் வினாக்களைத் தயார்செய்ததுடன் போலியான வழிமுறைகளையும் அறிக்கை தயாரிப்பில் சேர்த்திருந்தன. நாம் எவ்வளவு மோசமான அடிப்படையைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான்.

இதன் மையம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

1960-களில் காலனி ஆதிக்கத்திலிருந்து ஆப்பிரிக்க நாடுகளை விடுவிக்க நடந்த முயற்சிகளின்போது பிரான்ட்ஸ் பேனன் கூறினார், “கறுப்புத் தோல்கள் - வெள்ளை முகமூடிகள்” என்று. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர், அவர்களைவிட மோசமான அதிகாரிகளை விட்டுச் சென்றனர் - அவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடைய நீட்சியில் பள்ளிக்கூடங்கள் முதல் சட்டமியற்றும் மன்றங்கள் வரை ஆதிக்கச் சக்திகளுக்கு ஏற்ற மாதிரியே வடிவமைக்கப்படுகின்றன. ஆங்கிலேயர்களே இயற்றியிராத சட்டங்கள் தடா, பொடா போன்றவை. இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால்கள் என்றும், நீக்கப்பட வேண்டியவை என்றும் எந்தெந்தச் சட்டங்களைக் கருதுகிறீர்கள்?

நிறைய. காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இந்தியத் தண்டனையியல் சட்டப்பிரிவில் உள்ள தேசத் துரோகச் சட்டம் 124ஏ, தேசத்துக்கு எதிராகப் போர் தொடுப்பதுபற்றிய சட்டம் 121ஏ ஆகியவை அவற்றில் முக்கியமானவை. நாட்டின் உண்மையான ஜனநாயக விழுமியங்களுக்காகப் போராடும் எளிய மக்களை இந்தச் சட்டங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. இன்னும், மரண தண்டனையை அனுமதிக்கும் சட்டம் தொடங்கி நிறைய இருக்கின்றன.

இந்தச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது சரிதான்.ஆனால், அப்பாவிகளுக்கு மட்டும் அல்லாமல் கடுமையான குற்றவாளிகளுக்கும்கூடக் குரல் கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள் மறுபுறம் மக்களைப் பாதுகாக்கும் அரசின் பொறுப்பை எந்த அளவுக்குக் கருத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்?

மாவோயிஸ்ட்டுகள் ஆறு காவலர்களைக் கடத்திக் கொண்டுபோய் வைத்திருந்தபோது, மீட்பதற்காக பஸ்தார் காட்டில் 60 கி.மீ. நடந்துசென்றது மனித உரிமை ஆர்வலர்கள்தான். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அநீதியை யார் இழைத்தாலும், மனித உரிமைகள் எங்கே கேள்விக்குள்ளானாலும் அதற்கு எதிராகப் போராடுகிறோம். எங்களுடைய மனச்சாட்சியும் நாங்களும் விற்பனைப் பொருட்கள் அல்ல.

பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு வராத - பழங்குடிகளின் போராட்டங்கள் உட்பட - நிறையப் போராட்டங்களை நெருக்கமாக இருந்து கவனித்திருக்கிறீர்கள். அவை எதை உணர்த்துவதாக நினைக்கிறீர்கள்?

வெறும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்கள் அல்ல அவை. அடக்குமுறையைக் கையாளும் முரட்டு அரசு, சகமனிதர்களின் துயரைக் கண்டு கவலைப்படாத உணர்ச்சியற்ற சமூகம், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் அரிய வளங்களைச் சூறையாடும் நாசவேலைகள் என அனைத்துக்கும் எதிரான போராட்டங்கள். முக்கியமாக நாளைய இந்தியாவுக்கான போராட்டங்கள். உண்மையில், இந்தியாவில் ஜனநாயகம் என்பது எப்போது வேண்டுமானாலும் அறுபடக்கூடிய மெல்லிய கயிற்றில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதை அவர்கள்தான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் எதிர்காலத்துக்கு நம்பிக்கைக்குரிய அம்சமாக எதைப் பார்க்கிறீர்கள்?

உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயகமும் அதைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும், இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற போராளிகளும்தான் நம்பிக்கை. இன்னும்கூட அவகாசம் இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் – கிளர்ந்தெழுந்து, சுதந்திரமான – சமத்துவமான – இந்தியாவுக்காகப் போராட வேண்டும். அரசியலும் தேர்தலும் தகாதது அல்ல என்று உணர வேண்டும்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

காமாக்யாவிடம் வேண்டினால் பதவி கிடைக்குமா?




பிரம்மபுத்திரா படகு வீடுகள், சாலையோரப் பரிதாப வாழ்க்கை, முண்டியடிக்கும் ரிக்‌ஷாக்களைப் பார்த்துக் கொண்டே அதிலிருந்து கொஞ்சம் பிரிந்து, நீலாஞ்சல் மலையைச் சுற்றிச் சுற்றி ஏறினால், மாயங் கிராமத்தை அடைந்துவிடலாம். இந்தியாவின் தாந்திரிக வழிபாட்டின் மையமான காமாக்யா கோயில் இங்கேதான் இருக்கிறது.
வெல்லும் சொல் கொல்லும்
சுற்றி அமைந்திருக்கும் மலைக் குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயிலில் நுழைவது - அதுவும் பொழுது சாய்ந்து செல்வது - திகிலூட்டும் ஓர் அனுபவம். மந்திர தந்திரங்களின் பூமி இது. சிவனை மணந்த இளம் மனைவியான சக்தியே இங்கு காமாக்யாவாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். ஒரு குகையில், தரை மட்டத்துக்கும் கீழ் எப்போதும் நீர் சுரக்கும் சுனையிலிருக்கிறாள் உக்கிர தேவதை காமாக்யா.
எல்லாக் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் காமாக்யா நிறைவேற்றுவதாக நம்பிக்கை. பலியை ஏற்கும் தாய் என்பதால், ரத்தக் கவுச்சி கோயில் வளாகத்தைச் சூழ்ந்திருக்கிறது. தரையிலும் ஆங்காங்கே ரத்தம். கோயில் படிக்கட்டுகளில் நீண்ட தாடியுடனும் மிரட்டும் விழிகளுடனும் கஞ்சா புகைக்கும் சாமியார்களில் மந்திரவாதிகளும் அடக்கம்.
வழிபாடுகள் உக்கிரமாக நடக்கின்றன. “எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் தாந்திரிக மரபின் சடங்குகளும் யோக வழிமுறைகளும் நுட்பமானவை. பொதுவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை. தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகள் ஆரம்பக் காலத்தில் பன்றிகளைப் பலியிட் டார்கள்.
அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆட்டுக் கடாக்களையே பலி கொடுக்கிறார்கள். திருவிழா காலத்தில் எல்லா வகையான ஆண் பிராணிகளும் பலியிடப்படும்” என்றார் உடன் வந்த நண்பர்.
பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பிறகு, ஒரு மந்திர வித்தகரைச் சந்தித்தோம். “சொற்களின் வலிமையும் கூர்மையும்தான் மந்திரங்கள். ஒரு மந்திரம் போதும், உங்கள் வாயைக் கட்டிப்போட்டுவிட; இன்னொரு மந்திரம் மூலம் உங்களை மறையச் செய்துவிடலாம். ஆனால், தர்மம் இல்லாமல் மந்திரங்களைப் பிரயோகிக்கக் கூடாது. பிரயோகித்தவன் பாவத்தை அனுபவிக்க வேண்டும். காமாக் யாவில் அருளும் மந்திரங்களின் வலிமையும் கட்டுக்கதை அல்ல. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு” என்றவர் கண் முன்னே ஒரு பூச்செடியின் முள் ஒன்றை ஒரு மந்திரத்தின் மூலம் பூவாக மாற்றினார். பின்னர், ஒரு இடை வெளிக்குப் பின் நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அந்தப் பூவை முள்ளாக மாற்றினார். “மந்திரங்கள் விளையாட்டு அல்ல; கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இயல்பை நாம் மாற்றுவதை அன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டாள்” என்கிறார்.
அரண்டுபோய்விட்டார்களா ஆங்கிலேயர்கள்?
புராதனமான காமாக்யா கோயில் அசாமின் முதல் பேரரசான காமரூபா காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றிய முதல் குறிப்புகள் மிலேச்ச வம்ச வனமாலா வர்மதேவர் ஆட்சிக் காலத்திய தேஜ்பூர் கல்வெட்டுகளில் (ஏழாம் நூற்றாண்டு)காணக் கிடைக்கின்றன. ஏகப்பட்ட படையெடுப்புகள், தாக்குதல்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட கோயிலையே இப்போது பார்க்கிறோம் என்கிறார்கள். கோச் வம்சம், அஹோம் வம்சம், கச்சார் வம்சத்தோடு கோயிலைத் தொடர்புபடுத்தி வெவ்வேறான கதைகள் சொல்லப்பட்டாலும், கோயில் கதையைச் சொல்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் காமாக்யாவுக்கு அஞ்சி இங்கு கை வைக்க நடுங்கினார்கள் என்ற விஷயத்தைச் சொல்கிறார்கள்.
தாந்திரிக அறிஞர் மந்தீர் சாய்கியா, “மணிப்பூர் இளவரசர் மைபாங், கச்சார் சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவருடைய பெயர்களில் ஒன்றே ஊரின் பெயரான மாயாங். புத்தத் துறவிகள் இங்கு தாந்திரிகம் கற்றனர். அவர்கள் அசாமின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தாந்திரிகத்தைக் கொண்டுசென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
வாய்மொழி வழக்கில் இருந்த மந்திரங்களைக் கச்சார் மன்னர்கள்தான் எழுத்தில் பதிய ஊக்குவித்தார்கள். ஏராளமானவை தொலைந்து விட்டாலும் இப்போதும் அங்கும் இங்குமாக சுமார் நானூறு சுவடிகள் இருக்கின்றன. ஆனால், மந்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக் கூடாது; தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் கூட்டம்
எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் என்று நம்பப்படும் ஒரு கோயிலை எப்படி விட்டுவைப்பார்கள் நம்முடைய அரசியல் வாதிகள்? வடகிழக்குப் பகுதி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவி கிறார்கள். “எப்போதும் கோடைக்காலத்தில் நடக்கும் அம்புபாச்சி மேளாவின்போதும் இலை யுதிர் காலத்தில் நவராத்திரி துர்கா பூஜை யின்போதும்தான் இங்கு கூட்டம் அலை மோதும். அப்போது நாடு முழுவதிலுமிருந்து தாந்திரிகர்கள் இங்கே வழிபட வருவார்கள். இப்போதெல்லாம் தேர்தல் காலகட்டத்திலும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் கோயில் வளாகத்தில் கடை வைத்திருக்கும் பூரி.
அரசியல்வாதிகளுக்கு காமாக்யாவின் மந்திர விற்பன்னர்கள் இடம் அளிக்கிறார்களா? இல்லை என்று வலுவாக மறுக்கிறார்கள். “காமாக்யா பீடத்தின் சக்தியைக் கேள்விப்பட்டு, மந்திரங்களைப் பயன்படுத்திப் பதவிக்கு வந்துவிடலாம் என்கிற நப்பாசையில்தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கு மந்திர விற்பன்னர்கள் அவர் களுக்கெல்லாம் துணைபோவது கிடையாது. தவிர, எல்லோருக்குமே ஒரு விஷயம் தெரியும் - மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், காமாக்யாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று. ஆகையால், வரு வார்கள், பிராத்தனை செய்வார்கள், பலி கொடுப்பார்கள், அவ்வளவுதான்” என்கிறார்கள்.
கோயிலை விட்டு வெளியேறியபோது சரசரவென வந்து புகுகின்றன கொடி கட்டிய நான்கு கார்கள். உள்ளிருந்து கச்சிதமான உடைகளில் இறங்குகின்றனர் அரசியல்வாதிகள். ஒரு காரிலிருந்து எதையோ எடுக்க/இழுக்க படாத பாடுபடுவது தெரிந்தது. நெருங்கிப் பார்த்த போது, மறுத்துக்கொண்டு வெளியே வந்தது ஒரு முரட்டுக் கடா. அதை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி முழங்கிக்கொண்டே நுழைகிறார்கள்: “ஜெய் காமாக்யா!”
தொடர்புக்கு: samas@kslmedia.in
தி இந்து

Wednesday, April 9, 2014

இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி





ஒரு சுவாரஸ்யமான மனிதர் மூலமாக சுவாரஸ்யமான சயோனா சானாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மிசோரமின் பக்த்வாங் கிராமத்தின் ‘செல்வாக்கு' மிக்க குடிமகன் சயோனா சானா. ராஜ வாழ்க்கை என்று சொல்வார்களே... ஜனநாயக நாட்டில் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த மனிதர்.

மலைக் குன்றுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட நிலத்தின் மீது பசும் போர்வையைப் போர்த்தியதுபோல இருக்கும் மிசோரம் மாநிலத்தின் பக்த்வாங் கிராமம்தான் சயோனாவின் ஆளுகைப் பிரதேசம். பெரும்பாலும் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்ட குடில்களிடையே நான்கு தளங்களில் 100 அறைகள், 22 படுக்கை அறைகள், 17 குளியல் அறைகளுடன் விரிந்திருக்கிறது சயோனாவின் கான்கிரிட் வீடான ‘சுவாந்தர் ரன்' - இந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி. இங்கேதான் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 36 பேரப் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ்கிறார் எழுபது வயது சாயோனா, உலகின் மிகப் பெரிய குடும்பத் தலைவர்.

வீடல்ல; விடுதி!

ஒரு பெரிய விடுதிபோல இருக்கும் சயோனாவின் வீடு கிட்டத்தட்ட விடுதிபோலத்தான் இயங்குகிறது. மூன்று தச்சு வேலையகங்களை வைத்திருக்கிறார் சயோனா. தவிர, காய்கறித் தோட்டங்கள், கோழி - பன்றிப் பண்ணைகளில் தொடங்கி பள்ளிக்கூடம், மைதானம் வரை வைத்திருக்கிறார் சயோனா. ஆண்கள் தச்சு வேலையைக் கவனிக்க, பெண்கள் தோட்டம், பண்ணை மற்றும் சமையல் வேலைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

வெவ்வேறு வார்த்தைகளில் இந்தக் குடும்பத்தின் வேலைகளை வர்ணித்தாலும் அடிப்படையில், எல்லாமே குடும்பத்துக்கான சாப்பாட்டுச் சமாச்சாரம் மட்டும்தான். ஒரு நாளைக்குச் சராசரியாக 90 கிலோ அரிசி, 40 கிலோ உருளைக் கிழங்கு வேண்டுமாம். அசைவம் என்றால், 30 கோழிகளும் இரண்டு பன்றிகளும் வேண்டுமாம். ஆக, குடும்பத் தேவையைப் பெண்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வேலையைப் பகிர்ந்துகொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. “சயோனா எல்லாவற்றையும் சரியாகப் பிரித்துக்கொடுத்துவிடுவார்” என்கிறார்கள் மனைவிகள்.

சயோனாவுக்கு எல்லாமே சுழற்சி முறைதான். அவருடன் உணவு மேஜையில் யார் உட்கார்ந்து சாப்பிடுவது, வேலைக்குக் கூடப் போவது என்பதிலிருந்து படுக்கையைப் பகிர்ந்துகொள்வது உட்பட. சுழற்சி முறையை யாரும் மீறக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் சயோனா, ஊரில் செல்வாக்கு மிக்க ‘ஹம்த்லன் ருன்புய்' தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறார். “குடும்பத்தில் மட்டுமல்ல; ஊரிலும் அவர் ஒரு ராஜா மாதிரிதான். சாப்பாடு, கல்வி, மருத்துவச் செலவுக்குத் தேவை என்று யார் போய் நின்றாலும் தட்டாமல் உதவி செய்வார். அதனாலே அவர்மீது இந்த ஊரில் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நிறைய பெண்கள் அதனால்தான் அவரை விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டார்கள்’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

உண்மைதான். எல்லாத் திருமணங்களையும் பூரண சம்மதத்தின்பேரிலேயே செய்து கொண் டிருக்கும் சயோனாவின் பெரும்பாலான திரு மணங்கள் காதல் திருமணங்கள்.

சயோனா சேவை கடவுள் சேவை

முதல் மனைவி ஜத்தியாங்கிக்கு இப்போது 70 வயதாகிறது. முதல் திருமணம் நடந்தபோது சயோனாவுக்கு 17 வயதாம். “அவர் கடவுள் மாதிரி. அவரை எல்லோருமே விரும்புவார்கள். அவரால் நிறைய பேரை வாழவைக்க முடியும். நான் அவரை ஒரு கைதி மாதிரி ஆக்கிவிடக் கூடாது அல்லவா?” என்று கேட்கும் ஜத்தியாங்கிக்கு, சயோனாவின் மனைவி என்கிற ஸ்தானத்தைப் பலரிடம் பறிகொடுக்க அல்லது பகிர்ந்துகொள்ள நேரிட்ட இழப்பைக் காட்டிலும் குடும்பத்தின் மூத்த நிர்வாகி என்கிற பெருமிதமே வெளிப்படுகிறது. அச்சுப் பிறழாமல் அதே மாதிரி பேசுகிறார் கடைசி மனைவியான முப்பது வயது சயாம்தாங்கி. “உலகத்தில் எல்லோருக்கும் தாங்கள் விரும்பிய கணவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனக்குக் கிடைத்திருப்பதைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். அவரைக் கவனித்துகொள்வது கடவுளைக் கவனித்துக்கொள்வதற்குச் சமம்” என்கிறார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சயோனா வேடிக்கையானவராகத் தெரியலாம். அவரோ மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவராகப் பேசுகிறார்.

“என்னுடைய தந்தை சாலியா சானாவுக்கு ஏழு மனைவிகள், நாங்கள் 29 பிள்ளைகள். கடவுள் என்னை மேலும் ஆசிர்வதித்திருக்கிறார். கடவுள் என்னிடத்தில் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். என் குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவனின் சந்தோஷ வாழ்க்கைக்கும் நான் உழைக்க வேண்டும்; உழைக்கிறேன். இதற்கு மேலும் மனைவி - குழந்தைகளைத் தந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்” என்று சொல்லும் சயோனா, பலதார மணம்பற்றிப் பேசும்போது, “எங்கள் சமூகத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. என்னை விரும்பியவர்களை நான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். அதனால், நான் எதுவும் தவறு செய்வதாக நினைக்கவில்லை” என்கிறார்.

இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நியாயமா என்று கேட்டால், “நாட்டிலேயே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று எங்களுடையது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்கிறார். “எங்கள் குடும்பமும் வாழ்க்கையும் கூட்டுறவுக்கான உதாரணம். இந்தக் கூட்டுறவுதான் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும். நான் இப்படிப்பட்ட வாழ்க்கையைப் புதிய தலைமுறைக்கான வாழ்க்கையாகப் பார்க்கிறேன். அதனால்தான் என் வீட்டுக்கும் பள்ளிக்கும் மைதானத்துக்கும்கூட புதிய தலைமுறை (சுவாந்தர்) என்றே பெயரிட்டிருக்கிறேன்’’ என்கிறார்.

ஐந்து ஓட்டுகள் இருக்கும் வீட்டையே மொய்க்கும் நம்மாட்கள் சயோனாவைத் தாங்குதாங்கென்று தாங்கும் விதத்தைச் சொல்லவும் வேண்டுமா? சயோனா கையில் வீட்டு ஓட்டுகள் மட்டும் இல்லை; வெவ்வேறு வீடுகளில், பகுதிகளில் உள்ள குடும்ப ஓட்டுகள், அவரை மதிக்கும் ஊர் மக்கள் ஓட்டுகளும் இருக்கின்றன என்பதால் ராஜ கவனிப்புதான். ஒரு முரண்பாடு என்னவென்றால், சயோனா அரசாங்கத்தை நம்பவில்லை. பொறுப்புகளை நாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

சயோனாவைப் பொறுத்த அளவில் இந்தியா என்பது முழுக்க முழுக்க சுதந்திரத்தின் குறியீடு. “சீனாவில் இப்படியொரு வாழ்க்கையை வாழ அனுமதிப்பார்களா? யாருக்கும் தீங்கிழைக்காமல், ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் வாழ ஒரு நாடு அனுமதிக்க வேண்டும். இந்தியா என் மூலம் இந்தச் செய்தியை உலகுக்குச் சொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.

சயோனாவின் மூத்த மகன் பர்லியனாவும் பலதார மணத்தில் ஆர்வத்தோடு இருக்கிறார். “தாத்தா, அப்பா அளவுக்கு இல்லாவிட்டாலும், குறைந்தது இரண்டு திருமணங்களாவது செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் பர்லியனா.

பிள்ளைகள் எல்லோரும் இப்போதே சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஜூலை 21 அன்று சயோனாவின் 70-வது பிறந்த நாள். ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு பக்த்வாங் இப்போதே தயாராகிக்கொண்டிருக்கிறது. அப்போது சயோனாவின் வாக்கு வங்கியில் இன்னொரு வாக்கு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

- தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

Saturday, April 5, 2014

தேர்தல் களமும் போராட்டக் களம்தான்!- சுப. உதயகுமார் பேட்டி



வெக்கையே செடி கொடிகளாக மாறியதுபோல இருக்கிறது. யாருமற்ற பிரதேசத்தில் ஆங்காங்கே பிரமாண்டமாகச் சுழன்றுகொண்டிருக்கின்றன காற்றாலைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இடைப்படும் சாலையோரக் கொட்டகைகளில் இளநீர்க் காய்களையும் நுங்கு சுளைகளையும் வைத்துக்கொண்டு சாலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

பஸ் போக்குவரத்து அரிதானது என்பதால், சாலையில் மோட்டார் சைக்கிள்களையும் ஜீப்புகளையும் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு ஜீப்பும் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகள், சாமான்கள் வாங்க நகரத்துக்குச் செல்லும் பெண்கள், கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவ - மாணவிகளால் நிரம்பி வழியச் செல்கின்றன. கூடங்குளம் அணு உலையைத் தாண்டும்போது ஏராளமான போலீஸார் அங்கு ஒரு பெரும் கொட்டகையில் உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிகிறது. பொட்டல் காடுபோல விரியும் இடிந்தகரையில் நுழைகிறது வண்டி.

வெயிலை எதிர்கொள்ள பையைப் போட்டுத் தலையை மறைத்துக்கொண்டு சாலையில் ஓட்டமும் நடையுமாகச் சென்ற ஒரு பெண்ணிடம் வழி கேட்கிறார் ஓட்டுநர். லூர்து மாதா ஆலயத்துக்கு அவர் வழிகாட்டுகிறார். 1906-ல் கட்டப்பட்ட ஆலயம் இது. ஒருகாலத்தில் நெய்தல் கிராமங்களில் அழகான கெபிக்காகவும் நேர்த்தியான தேரோடும் வீதிக்காகவும் பெயர் பெற்றிருந்த ஆலயம்; இப்போது சுதந்திர இந்தியா எதிர்கொள்ளும் மிக நீண்ட தொடர் போராட்டத்தின் மையக் களம். சுப. உதயகுமார் இப்போது அணு சக்திக்கு எதிரான போராட்டக்காரர் மட்டும் அல்ல; கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர். இந்திய அரசியல் வரலாற்றில் சுற்றுச்சூழல் அரசியலை முன்வைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் முதல் வேட்பாளரைச் சந்தித்தேன்.

போராட்டம் தொடங்கி, இன்றைக்கு எத்தனை நாட்கள் ஆகின்றன என்று சரியாக நினைவிருக்கிறதா?

962 நாட்கள்.

இந்த 962 நாட்கள் போராட்டத்திலிருந்து என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு அறவழிப் போராட்டத்துக்கான தீர்வு ஒரே நாளில் கிடைத்துவிடாது; அதேசமயம், மக்கள் வசம் உள்ள ஒரு போராட்டத்தை எந்தச் சூழலிலும் முறியடிக்க முடியாது.

போராட்டத்தைப் பற்றி இப்போது உங்கள் மதிப்பீடு என்ன அதாவது, வெற்றியா தோல்வியா?

இந்த நாட்டின் விளிம்புநிலை மக்கள் - குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் - மையத்தில் இருந்து சர்வதேச அணு சக்தி லாபிக்கு எதிராக நடத்தும் போராட்டம் இது. இலக்கை நாங்கள் அடையாதது தோல்வியாக இருக்கலாம்; ஆனால், இப்படியொரு போராட்டமே பெரிய வெற்றிதான் இல்லையா?

நவீன வளர்ச்சியற்ற உலகம் அழகாக இருக்கலாம். பரிசுத்த மானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமானது என்று நினைக்கிறீர்கள்?

அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டாம் என்று சொல்ல நாங்கள் ஒன்றும் கற்கால மனிதர்கள் இல்லை. எங்கள் பிள்ளைகளும் நாளை பொறியாளர்கள் ஆக வேண்டும். அழிவுக்கான அறிவியலை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம். எவ்வளவோ மாற்று எரிசக்தி வழிகள் இருக்கும்போது, ஏன் அழிவுசக்தியான அணு சக்தி என்றே கேட்கிறோம்.

உங்கள் ஊரைச் சுற்றியே ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்குகின்றன. ஆனால், அவற்றால் இவ்வளவு பெரிய ஒரு நாட்டின் மின் தேவையில் எந்த அளவுக்குப் பூர்த்திசெய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்?

இன்றைக்கு அணு சக்தி மீது காட்டப்படும் அதே தீவிரம், சூரிய மின் சக்தி, காற்று மின் சக்தி மீது காட்டப்படுமேயானால், நிச்சயம் நம்மால் நம் தேவையை எதிர்கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். உண்மையில், எரிசக்தி நோக்கோடு அணு உலைகள் அணுகப்படவில்லை. இதில் சர்வதேச வியாபார நோக்கங்களும் தரகு லாபங்களுமே முக்கியக் காரணிகளாகச் செயல்படுகின்றன.

உங்களையே அமெரிக்கத் தரகராகத்தான் அரசு பார்க்கிறது... இப்போது தேர்தலில் நிற்பதிலும்கூட வெளிநாட்டு ஆர்வங்கள் இருப்பதாகப் பார்க்கிறது...

இது வெட்கக்கேடானது. எனக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று சொன்ன அரசு அதை நிரூபிக்க ஒரு துண்டுச் சீட்டைக்கூட இதுவரை ஆதாரமாகக் காட்டவில்லை.

சரி, போராட்டக் களத்துக்கும் தேர்தல் களத்துக்குமான வித்தியாசம் எப்படியிருக்கிறது?

இரண்டுக்கும் இடையில் நாங்கள் வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. போராட்டக் களத்தின் ஒரு வடிவம்தான் இந்தத் தேர்தல் களமும்.

முன்பு நீங்கள் திரும்பத் திரும்பச் சொன்னீர்கள், “போராட்டத்தில் அரசியலைக் கலக்க மாட்டோம்” என்று. ஆனால், இன்று நீங்களே அரசியல்வாதியாகி நிற்கிறீர்களே?

நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் போராட்டத்தில் அரசியலைக் கலக்க மாட்டோம் என்பதில் உறுதியாகவே இருந்தோம். ஆனால், இந்த நாட்டின் எளிய மக்கள் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து அற வழியில் ஒரு போராட்டத்தைத் தொடர்கிறோம். அதற்குக் கிடைத்த மரியாதை என்ன என்று நீங்கள் யோசிக்க வேண்டும். நாட்டின் மீது போர் தொடுத்த குற்ற வழக்கு, தேசத் துரோகக் குற்ற வழக்கு உள்பட 349 வழக்குகளை 2.27 லட்சம் பேர் சுமந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம். எம் மக்களின் தொழில், வருமானம், பிள்ளைகளின் கல்வி யாவும் பாதித்தன. அரசாங்கம் ஊருக்குள்ளேயே யாரையும் நுழையவிடாமல் விரட்டியது. இங்கே ஓடின பஸ்களை நிறுத்தியது. படாத கஷ்டங்கள் இல்லை. ஆனாலும் கண்ட பலன் என்ன? இதோ அணு உலை இயங்குகிறது. கடைசியில், அரசியல் அதிகாரம்தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது?

ஆனால், அரசியல் சார்பற்று உங்களுக்குப் பின் திரண்ட ஆயிரக் கணக்கான மக்களையும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியலை நோக்கித் தள்ளியிருக்கிறீர்கள்...

ஒரு திருத்தம். இந்த முடிவு நாங்கள் சில பேர் யோசித்து மக்கள் மேல் சுமத்திய முடிவு அல்ல. போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவருடனும் கலந்து பேசி எடுத்த முடிவு. ‘நமக்கு அதிகாரம் வேண்டும். அது வெறும் ஒரேயொரு எம்.பி. சீட்டாக இருப்பதைக் காட்டிலும் ஒரு இயக்கத்தின் பலமாக இருப்பதுதான் நம் கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும்’ என்கிற மக்கள் முடிவையே நாங்கள் சுமந்திருக்கிறோம்.

ஆனால், உங்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து நீங்கள் வெளியே வருவதற்கான உத்தியாகவே இந்தத் தேர்தலைக் கையாள்வதாக வெளியிலிருப்பவர்கள் நினைக்கிறார்கள்...

சரி, அப்படியும் வைத்துக்கொள்வோமே... அதில் என்ன தவறு? இதில் எந்த அநியாயமும் பாவமும் இல்லையே?

ஏன் ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

எங்களுக்கு அதுதான் சரியான தேர்வாக இருந்தது. காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க. எல்லோரும் இந்தப் பிரச்சினையில் தங்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை எவ்வளவோ தருணங்களில் காட்டிவிட்டார்கள். இந்தச் சூழலில்தான் அர்விந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் அழைப்பை நாங்கள் பரிசீலித்தோம்.

அது எந்தச் சித்தாந்த அடிப்படையும் இல்லாத கட்சி இல்லையா?

எந்தக் கட்சி இன்றைக்குச் சித்தாந்தப்படி இயங்குகிறது? தெரியாமல்தான் கேட்கிறேன், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் என்ன சித்தாந்தத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன? தி.மு.க-வின் கொள்கை ‘அண்ணா வழியில் அயராது உழைப்பது’ என்றார் கருணாநிதி. அ.தி.மு.க- வின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ என்றார் எம்.ஜி.ஆர். உண்மையில், அண்ணாயிஸம்தான் என்ன? முன்பு சோ சொன்ன மாதிரி ‘அண்ணனுக்கெல்லாம் தம்பி, தம்பிகளுக்கெல்லாம் அண்ணா - அதுதான் அண்ணாயிஸம்’ என்கிற கதையைத்தானே இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?

மக்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுத் தருவதற்காகப் போராட ஒரு நல்ல வழியைக் கையாள்வதுதான் ஒரு மக்கள் இயக்கத்தின் சிறந்த சித்தாந்தமாக இருக்க முடியும். அதை எங்கள் கட்சி புரிந்துகொண்டிருக்கிறது.

இனமும் மதமும் சாதியும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியத் தேர்தலில் சுற்றுச்சூழல் அரசியல் எடுபடும் என்று நம்புகிறீர்களா?

மக்கள் எல்லாவற்றையும்விட வாழ்வதற்குப் பாதுகாப்பான சூழலையே முக்கியமாகக் கருதுவார்கள் என்று நம்புகிறோம்.

தேர்தலில் நீங்கள் ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?

மக்களில் ஒருவனாக மக்கள் நலனுக்காகச் செயல்படுவேன். முக்கியமாக ஒருபோதும் பெருநிறுவனங்களின் தரகனாகச் செயல்பட மாட்டேன்.

தேர்தலுக்கு முன்போ, பின்போ கைதுசெய்யப்பட்டால்?

இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் பிடிமானமும் இருக்கிறது. ஒருபோதும் எதற்காகவும் நான் அஞ்சவில்லை.

ஒருவகையில் இது காலத்தை எதிர்க்கும் போராட்டம் - முடிவற்ற போராட்டம், இல்லையா?

நிச்சயம் என் காலத்துக்குள் இந்தப் போராட்டம் முடிந்துவிடும் என்றோ, தீர்வு கிடைத்துவிடும் என்றோ நான் நம்பவில்லை. ஆனால், எதிர்காலத் தலைமுறை அணு ஆபத்து அற்ற நாடாக இந்தியாவை உருமாற்றும்!

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

Friday, April 4, 2014

இந்த ஜனநாயகம்தான் நம் ஆதாரம்: கொடிக்கால் நேர்காணல்



முக்கடல்கள், சுற்றிலும் மலைகள், பரந்து விரிந்த வயல்கள்... கன்னியாகுமரியின் அழகை விவரிக்கவும் வேண்டுமா? ஐந்திணைகளில் நான்கு திணைகளும் ஒருங்கமைந்த குமரி, தமிழகத்தின் அழகிய அடையாளம்.

சுதந்திரம் அடைந்தபோது குமரிப் பகுதி தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஏராளமான படையெடுப்புகளைச் சந்தித்த அது கடைசியில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்கள் அகன்ற பின்னரும் திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியிலேயே கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அது நீடித்தது.

மார்ஷல் நேசமணி தலைமையிலான விடுதலைப் போராட்டத்தின் விளைவாகவே அது தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறியது. நிலப் பகுதியில் கிட்டத்தட்ட சரி பாதி விவசாய நிலமாகவும் மூன்றில் ஒரு பகுதியை வனமாகவும் கொண்ட குமரியைத் தாமிரவருணியும் வள்ளியாறும் பழையாறும் நிறைக்கின்றன. அந்தக் காலத்தில் குமரியைத் திருவிதாங்கூரின் களஞ்சியம் என்று சொல்வார்களாம்.

இப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் குமரியும் இடம்பெற்றிருக்கிறது. என்றாலும், தலைநகருக்குச் செல்லும் தேவை ஏற்படும்போதெல்லாம், கூப்பிடு தொலைவில் இருக்கும் திருவனந்தபுரத்தை விட்டுவிட்டு, சென்னைக்குச் செல்ல வேண்டியிருப்பது முணுமுணுப்பாகக் குமரிக்காரர்களிடமிருந்து இன்னமும் வெளிப்படுகிறது.

இந்தியச் சுற்றுப்பயணத்தைக் குமரியிலிருந்து தொடங்குவது எவ்வளவு பொருத்தமானதோ, அவ்வளவு பொருத்தமானது கொடிக்கால் ஷேக் அப்துல்லாவிடமிருந்து தொடங்குவதும். ஓர் ஏழை இந்துவாக, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த ஷேக், தன்னுடைய இளம்வயதிலேயே தாய் - தந்தை இருவரையும் இழந்தவர். தன் வாழ்வைத் தானே வடிவமைத்துக்கொண்டவர். தன்னுடைய 15-வது வயதில், நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் அன்றைய ஐக்கிய முன்னணி வேட்பாளர்களான சி. சங்கர், டி.எஸ். ராமசாமிப் பிள்ளை, கற்காடு எஸ். சாம்ராஜுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசியலில் அடி எடுத்துவைத்தவர் ஷேக். தொடர்ந்து ஈத்தாமொழியில் தெற்கெல்லை விடுதலைப் போராட்ட ஆதரவு மாநாடு, குமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான தொடர் போராட்டங்கள், கக்கன் பங்கேற்ற தாழ்த்தப்பட்டோர் லீக் மாநாடு என இறங்கியவரின் ஆரம்பக் கால அரசியல் களம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மனைவியும் கட்சிக்காரர் என்பதால், கட்சி, அமைப்புப் பணிகள், எழுத்து, பத்திரிகை, போராட்டம், சிறை என்று காலத்தைக் கழித்தவர், ஒருகட்டத்தில் தலித் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். இஸ்லாத்தை வரித்துக்கொண்ட பிறகு இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து பணியாற்றினார். ஷேக்கின் அரசியல் தொடர்புகளை கருணாநிதி முதல் இந்திரா காந்தி வரை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தின் விளிம்புநிலை அரசியலின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான ஷேக்குக்கு இப்போது 80 வயதாகிறது. மனிதர் படு உற்சாகமாகப் பேசுகிறார்.

நீங்கள் எல்லைப் போராட்டங்களில் பங்கேற்றவர் இல்லையா? இப்போது அந்தப் போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதைப் பாருங்கள்... (எல்லைப் போராட்டத் தியாகி என்று அரசு அளித்த பட்டயத்தைக் காட்டுகிறார்...) அன்றைக்குப் பட்ட பாட்டுக்கான நினைவுச் சின்னம் இது. இன்றைக்கு இருப்பவர்களுக்கு அந்த வலி தெரியாது. இனம், மதம் சார்ந்து நீங்கள் சிறுபான்மையினராக உணர்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது மொழி சார்ந்து உங்களைப் பலவீனமாக நீங்கள் உணர்வது.

ஆனால், இன்றைக்கெல்லாம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா மொழி பேசும் மக்களும் வாழத்தானே செய்கிறார்கள்?

நீங்கள் பெருநகரங்களின் நிலைமையோடு இதை ஒப்பிடக் கூடாது. பிழைப்பதற்காக ஒரு இடத்துக்கு நிர்ப்பந்தப்பட்டுப் போவது வேறு. உங்கள் சொந்த ஊரிலேயே நீங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டவராக வாழ்வது வேறு. சரி, பிழைப்புக்காக வெளியூருக்கு இடம்பெயர்வதையே எடுத்துக்கொள்வோம். அங்கு போன பிறகு எந்தப் பிரச்சினைக்காவது குரல்கொடுக்கிறீர்களா? பிழைத்தால் போதும் என்றுதானே நினைக்கிறீர்கள். ஏனென்றால், அந்த ஊர் உங்களுடைய ஊர் அல்ல.

இந்தியா மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது சரியானதுதானா?

அதுதான் சரியானது; அதுதான் பொருத்தமானது. தேசிய நலன் என்ற பெயரிலும் பிராந்தியப் பிரிவினை எண்ணங்கள் வலுவடையும் என்ற பெயரிலும் மொழிவாரிப் பிரிவினையை விமர்சித்தவர்கள் உண்மையில் தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்கவே முயற்சித்தார்கள். ஒருவேளை அவர்கள் நோக்கப்படி பொருளாதார நோக்க அடிப்படையிலான மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு இந்தியா சிதறிப்போயிருக்கும்.

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி எல்லாத் தேர்தலிலும் பங்கெடுத்திருக்கிறீர்கள். அன்றைய சூழலை இன்றைய சூழலோடு ஒப்பிட முடியுமா?

கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவோ படிக்கிறோம், சம்பாதிக்கிறோம், வளர்கிறோம் என்றெல்லாம் சொன்னாலும், நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதைத் தேர்தல்கள்தான் சரியாக அடையாளப்படுத்துகின்றன. பணம், இனம், சூது இவைதானே தேர்தலைத் தீர்மானிக்கின்றன? அன்றைக்கு அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு, பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு இருந்தது. அரசியல்வாதிகளும் அந்த மதிப்புக்குக் கட்டுப்பட்டே கண்ணியமாக நடந்துகொண்டார்கள். இன்றைக்கு இரு தரப்பிலுமே அது போய்விட்டது. நான் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்தபோதுகூட, வீட்டில் மளிகைச் சாமான் வாங்கக் காசு இல்லாத நிலையை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், கவனம் எல்லாம் கட்சியில்தான் இருந்தது. நான் இல்லாதபோது வீட்டுக்கு வரும் தோழர்கள் அடுக்களையில் என்ன இருக்கிறது, இல்லை என்று பார்த்துவிட்டுத் தங்கள் கைக் காசில் சாமான் வாங்கிப் போட்டுவிட்டுப் போவார்கள். ஆனால், பணம் என் பொதுவாழ்க்கையைப் பாதிக்கவில்லை. இன்றைக்கெல்லாம் இது சாத்தியமா? அரசியல் முழுக்க முழுக்கப் பணக் காரர்கள்வசம் போனதுதான் நடந்ததிலேயே மோசம்.

எந்தக் காலகட்டத்தில் இது நடந்தது? முக்கியக் காரணம் யார்?

படிப்படியாகத்தான் நடந்தது. இதிலே யாருமே நியாயவான் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியைப் பொற்காலம் என்று சொல்கிறோம். அந்த காமராஜரே சுதந்திரப் போராட்டத்தில் போராடிய தூக்குமேடை ராஜகோபாலுக்கும் காசிராஜனுக்கும் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லையே? பெருமுதலாளிகளான எம்.சி.சங்கர ரெட்டியாருக்கும் அய்யநாடாருக்கும்தானே கொடுத்தார்? ஆக, யாரும் இதில் விதிவிலக்கு இல்லை.
சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸுக்கு அடுத்த நிலை யில் இருந்த இடதுசாரிகள் ஏன் கொஞ்சம்கூட முன்னகர வில்லை? ஒரு முன்னாள் இடதுசாரியாக நீங்கள் இதுபற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஒரு எழுத்தாளர் சொன்னதுபோல, ‘கம்யூனிஸம் என்பது விவாதிக்க வேண்டிய சிந்தனை அல்ல; அது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.’ கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியதெல்லாம், அந்தந்தச் சமூகத்துக்கு ஏற்ப அதை எப்படிச் செயல்படுத்த வேண்டியது என்கிற வழிமுறையைக் கையாள்வதுதான். இந்திய கம்யூனிஸ்ட்டுகள் அந்த வழிமுறையை இன்னும் கண்டடையவில்லை.

சரி, இந்தியச் சமூகத்தின் தலையாய பிரச்சினையாக எதைச் சொல்வீர்கள்?

சாதி.

அதனால்தான் மதம் மாறினீர்களா?

ஆமாம்.

சாதியிலிருந்து தப்பிக்க மதம்தான் புகலிடமா?

என்னளவில் கண்டுகொண்ட வழி இது. அம்பேத்கர் இந்த வழியைத்தானே கையாண்டார்?

இந்தியாவில் இந்து மதம்போலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களிலும் சாதிப் பாகுபாடு இருக்கத்தானே செய்கிறது?

என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இல்லை என்று சொல்வேன். நிச்சயமாக இந்து மதம் அளவுக்குச் சாதிப் பாகுபாடு எங்கும் இல்லை என்பதை எல்லோருமே அறிவார்கள்.

சரி, அன்றைய செல்லப்பாவிலிருந்து இன்றைய அப்துல்லா வரையிலான ஒட்டுமொத்தப் பொது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லுங்கள்...இந்தியா என்ற நாட்டை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தச் சாதி, மதம், பணப் பாகுபாடு எல்லாவற்றையும் தாண்டி நாம் நமக்கான வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது பார்த்தீர்களா? அதைத்தான் - அந்த ஜனநாயகத்தைத்தான் - நான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாகப் பார்க்கிறேன். எவ்வளவோ கொடுமைகளையெல்லாம் அனுபவித்திருக்கிறேன். எல்லாவற்றி லிருந்தும் மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையையே இந்த நாடுதான் தந்திருக்கிறது. நிச்சயம் நல்ல மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறேன். நேற்று வரை அர்விந்த் கேஜ்ரிவால் யார்? இன்றைக்கு அவரும் ஒரு அகில இந்தியத் தலைவராக உருவாகியிருக்கிறாரே? பல நல்லவர்கள் அவர்கள் பின் அணிவகுக் கிறார்களே? எப்படி? நாடு தன் தேவைக்கு ஆட்களை உருவாக்குகிறது. உருவாக்கிக் கொள்ளும். நான் இந்தியாவை நம்பிக்கையுடனேயே பார்க்கிறேன்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

Thursday, April 3, 2014

வ.வே.சு. அய்யரின் மறுபக்கம் - எஸ்.தோதாத்ரி



பாரதி, அரவிந்தர், வ.வே.சு. அய்யர் என்ற இந்த மூவரும் காந்தியுகத்திற்கு முந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள். இவர்களில் பாரதியை நாம் நினைவுபடுத்தும் அளவிற்கு, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. அரவிந்தர் தீவிரவாதியாக இருந்து ஆன்மிகவாதியாக மாறியவர். ஆனால் வ.வே.சு. அய்யர் கடைசி வரை தீவிரவாதியாகவே இருந்து மறைந்தவர். 
.

இந்த வட்டத்தில் பாரதிக்கு அடுத்தபடியாக வ.வே.சு. அய்யர், தமிழ் இலக்கியத்திற்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளார். வ.வே.சு. அய்யர் லண்டன் சென்று பாரிஸ்டர் படித்தார். அங்கு வீரசாவர்க்கரைச் சந்தித்தார். அங்கு கம்பராமாயணம் பற்றி சொற்பொழிவாற்றினார். டி.எஸ்.எஸ்., ராஜன், எம்.பி.டி. ஆச்சார்யா ஆகியோருடன் பழகினார். துருக்கிப் புரட்சி வீரர் கமால் ஆட்டா துருக்கினைச் சந்தித்தார். பின்னர் புரட்சித்தாய் மேடம் காமாவினைச் சந்தித்தார். "இந்தியா' பத்திரிகையில் எழுதினார்.

1909இல் காந்தியைச் சந்தித்தார். சாவர்க்கர் கைதானவுடன் சாவர்க்கருக்காக வழக்காட பல ஏற்பாடுகளைச் செய்தார். பாரீஸ் சென்று அபிநவ பாரத் சபையின் பாரீஸ் கிளையில் டிரஸ்டிகளில் ஒருவராகப் பணியாற்றினார். 1910 ஆகஸ்ட் 27இல் இன்டர்நேஷனல் சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மேடம் காமாவுடன் சென்றார். பாரீஸ் குழு என்ற புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டார். பின்னர் எகிப்து, பெர்லின் சென்று 1910இல் இந்தியா வந்தார். வரும் வழியில் ஒற்றர்களை ஏமாற்ற பல வேடங்கள் புனைந்து தப்பினார்.

1911இல் வாஞ்சிநாதன் வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார். வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தார். மேடம் காமா அனுப்பிய பிரெüனிங் பிஸ்டலை வாஞ்சியிடம் அய்யர் கொடுத்தார். பரத்துவாஜ ஆசிரமம் என்ற குருகுலத்தை நிறுவினார். 1881 ஏப்ரல் 2ஆம் தேதி பிறந்த அய்யர் 1925இல் மகள் சுபத்திராவைக் காப்பாற்றுவதற்காக பாபநாசம் அருவியில் குதித்தார். பிறகு மீளவேயில்லை.

அய்யரது இலக்கியப் பணிக்குப் பின்புலமாக இருந்தது அவரது பரந்த படிப்பு. தமிழ்நாட்டு அறிஞர்களில் இவ்வளவு மொழிப் புலமை வாய்த்த ஆய்வாளர்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு முதலான மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். அந்த மொழிகளில் உள்ள காவியங்களை அந்த மொழிகளிலேயே படித்தவர் அவர். 1916ஆம் ஆண்டில் மண்டையம் எஸ். ஸ்ரீனிவாசச்சாரியாருடன் இணைந்து "கம்ப நிலையம்' என்ற பதிப்பகம் ஒன்றை நிறுவினார்.

கம்பனை மற்றக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுக் காட்டி, இவர்கள் எல்லாரையும் விடக் கம்பன் உயர்ந்தவன் என்று கூறியவர் அய்யர்.

"கவி லோகத்தில் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடி சாய்ந்து வணங்க வேண்டியதுதான். மேல்நாட்டாருக்குள் கவி சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியர், கதே ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை.'

இந்த நோக்கில் அய்யர், கம்பன் பற்றி ஆங்கிலத்தில் 'ஓஹம்க்ஷஹழ்ஹம்ஹஹ்ஹய்ஹ அ நற்ன்க்ஹ்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல், அய்யர், பெல்லாரி சிறையில் (1921) இருக்கும்பொழுது எழுதப்பட்டது.

இந்த முயற்சியுடன் அய்யர் நிற்கவில்லை. சாமன்யனுக்கும் விளங்க வேண்டும் என்று கம்பராமாயணத்தினை பதம் பிரித்து பாலகண்டத்தினை சுருக்கி வெளியிட்டார். இதேபோன்று பாட பேத ஆராய்ச்சி, கம்பனது காலம் பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றிலும் அய்யர் ஈடுபட்டார்.

இத்துடன் மட்டுமல்லாமல் கவிதை பற்றிய கொள்கையை மூன்று கட்டுரைகளில் விவரித்துள்ளார். அவரது "காவிய உத்தியானம்' என்ற கட்டுரை உலக இலக்கியங்கள் அனைத்தினையும் பற்றியது. இவை தவிர வ.வே.சு. அய்யரைத் தமிழ் சிறுகையின் மூலவர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவரது "மங்கையர்க்கரசியின் காதல்' என்ற தொகுப்பு கலாபூர்வமான சிறுகதைகளைக் கொண்டது. பாரதியின் "கண்ணன் பாட்டு' முன்னுரை அவரது ரசனைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

ஒரு தீவிரமான தேசபக்தர், அப்பழுக்கற்ற இலக்கியவாதி என்று அய்யர் பரிணாமம் பெற்றுள்ளார்.

சேரன்மகாதேவியில் அவர் நடத்திய குருகுலத்தில் ஜாதி வேறுபாடு காட்டியவர் என்ற குற்றச்சாட்டையே வைக்கின்றனர். இதன் காரணமாக அவரது மற்ற அம்சங்கள் மூடி மறைக்கப்பட்டு விட்டன.

தினமணி

Thursday, March 20, 2014

நியூட்டன், ஆப்பிள், அணுகுண்டு…



அறிவின் சில பகுதிகள் மனிதர்களுக்கு எட்டாதவை என்றும் கடவுள் எதை வெளிப்படுத்துகிறாரோ அதை மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும் என்றும் பல நூற்றாண்டுகளாக மேற்கத்தியக் கலாச்சாரம் நம்பிவந்தது.

16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், குறைந்தபட்சம் அதன் பௌதிக பாகங்கள் முழுவதையும் மனிதர்கள் அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அது. தடை ஏதுமின்றி அறிவைப் பெறுவதற்கான உரிமையின் மீது கொண்ட அந்த நம்பிக்கைதான் கடந்த 1000 ஆண்டுகளில் நடந்த அறிவு வளர்ச்சியில் மிக முக்கியமான நிகழ்வு.

முன்னுதாரணமற்ற புத்தகம்

அந்தப் புதிய நம்பிக்கையின் மகுடம் என்று ஐசக் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ (1687) புத்தகத்தைக் கூறலாம். இந்தப் பிரம்மாண்டமான அறிவியல் நூல்தான் நிலைமம் (ஒரு பொருள் ஓய்வு நிலையில் அல்லது சீரான இயக்கத்தில் இருக்கும் பண்புதான் நிலைமம்), விசை போன்ற அடிப்படையான கருத்துகளை நிறுவியது, இயக்கத்துக்கான பொது விதிகளைச் சொன்னது, ஈர்ப்புவிசைக்காகச் சிறப்பு விதியை முன்வைத்தது. நியூட்டனின் இந்தப் புத்தகம் அறிவியல் வரலாற்றில் முன்னுதாரணமற்றது.

அதேபோல் நவீன அறிவியலின் பிறப்பிலும் அது முக்கியப் பங்கு வகித்தது. ஈர்ப்புவிசை குறித்து அவர் உருவாக்கிய விதி மகத்தானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானது என்னவென்றால், எல்லையற்றும் பிரபஞ்ச அளவிலும் அந்த விதியைப் பொருத்திப்பார்க்கக் கூடிய தன்மைதான். மரத்திலிருந்து ஆப்பிளை விழவைத்த அதே ஈர்ப்புவிசைதான் பூமியை நிலவு சுற்றிவருவதற்கும் காரணமாகிறது.

இப்படியாக, பூமிக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே கோடு கிழித்து, அரிஸ்டாட்டிலால் பிரித்து வைக்கப்பட்டிருந்த உலகத்துக்கு நியூட்டனின் ‘பிரின்சிபியா' புத்தத்தால் சம்மட்டி அடி விழுந்தது.

பிரபஞ்சம் முழுமைக்கும் பொருந்தும் ஈர்ப்புவிசை என்பது நியூட்டனின் தத்துவம். அந்தத் தத்துவத்தின் ஆழத்தில் மறைந்திருப்பது இதுதான்: ‘இந்தப் பௌதிகப் பிரபஞ்சத்தை மனிதனால் அறிந்துகொள்ள முடியும்.' மனிதப் பிரக்ஞையின் பரிணாமத்தில் இது மிகவும் புதுமையான சிந்தனை. மேலும், புதிய விடுதலை என்றும், மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட புதிய அதிகாரம் என்றும் இந்தச் சிந்தனையைச் சொல்லலாம்.

இந்தச் சிந்தனை இல்லையென்றால், நமக்கு நியூட்டன் கிடைத்திருக்க மாட்டார். நியூட்டனைத் தொடர்ந்து நிகழ்ந்த அறிவுலக, அறிவியல் சாதனைகளும் சாத்தியமாகியிருக்காது.

அவர் கண்டுபிடித்த விதிகளைவிடவும் மிகமிக முக்கியமான வேறொன்றை நியூட்டன் சாதித்திருப்பதை அவருடைய சமகாலத்தவர்களும் உணர்ந்தார்கள். ‘பிரின்சிபியா' நூலின் இரண்டாம் பதிப்பில் தனது நூலறிமுகத்தில் ரோஜர் கோட்ஸ் என்பவர் இப்படி எழுதுகிறார்: “மனித மனதுக்கு எட்டாதவை என்று முன்பு கருதப்பட்டவற்றையும் எட்டிப்பிடித்த சாதனையை நியூட்டன் நிகழ்த்தியிருக்கிறார்… இப்போது கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.”

நவீன அறிவியலின் வரலாறு

நியூட்டனின் ‘பிரின்சிபியா'வில் காணப்படும் புதிய உளவியலை உருவாக்கியது எது? மதச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள் நிச்சயமாக இதில் பங்கு வகித்தன. 1517-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் பிரகடனங்கள் புராட்டெஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்ததுடன், திருச்சபையின் அதிகாரங்களைக் குறைத்தன. பைபிளை ஒவ்வொரு தனிமனிதரும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.

அதற்காக அவர்கள் பாதிரியார்களாக ஆக வேண்டும் என்பதில்லை என்று அவர் சொன்னது புதுவிதமான ஓர் அக விடுதலையை ஊக்குவித்தது. மதரீதியான இந்தச் சுதந்திரம் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளுக்கும் பரவியது.

இதைத் தொடர்ந்து நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. 1572 நவம்பர் 11-ம் தேதியன்று, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, டிக்கோ ப்ராயே என்ற டேனிஷ் வானியலாளர் காஸ்ஸியபியா நட்சத்திரக் கூட்டத்தில் மிகமிகப் பிரகாசமாக ஒளிரும் ஒரு பொருளைக் கண்டார். அதற்கு முன்னால் அந்தப் பொருளை அங்கே பார்த்ததில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.

ப்ராயே கண்டுபிடித்தது வேறொன்றுமில்லை, பெருநட்சத்திர வெடிப்புதான் அது. நட்சத்திரங்களெல்லாம் அழிவற்றவை, மாறாதவை என்ற பழம் நம்பிக்கைகளை ப்ராயேயின் கண்டுபிடிப்பு வெடிக்கச் செய்தது.

பிறகு, விண்ணுலகங்களின் தெய்விகப் பூரணத் தன்மை இத்தாலிய இயற்பியலாளர் கலிலியோவாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் தனது புதிய தொலை நோக்கியை 1610-ல் நிலவை நோக்கித் திருப்பினார். “விண்வெளியில் இருக்கும் நிலவு முதலானவை சீராகவும், சமமாகவும், பரிபூரணக் கோளமாகவும் இருக்கும் என்று காலம்காலமாகத் தத்துவஞானிகள் சொல்லிவந்தார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் நேரெதிராக நிலவு மேடும் பள்ளமுமாக, கரடுமுரடாக, சீரற்ற பரப்பைக் கொண்டிருந்தது” என்கிறார் கலிலியோ.

நியூட்டன் பிறப்பதற்கு முந்தைய சில தசாப்தங்களில் வாழ்ந்த ரெனே தெகார்தேவின் தத்துவங்களும் அப்போது பெரும் செல்வாக்கு செலுத்தின. தன் இருப்பு உள்பட எல்லாவற்றின் இருப்பையும் சந்தேகிக்கக்கூடிய ஒரு தத்துவப் போக்கை முதன்முறையாக தெகார்தே தொடங்கிவைக்கிறார். “நான் சிந்திக்கிறேன். எனவே, நான் இருக்கிறேன்” என்றார் அவர்.

நியூட்டனின் பிரபஞ்சம் தழுவிய இயற்பியல் விதிக்கு முன்வடிவம் போன்ற ஒரு கருதுகோளை தெகார்தே முன்வைத்தார். அதற்கு ‘சுழல்கள்' என்று பெயர். ஆனால், இதை நிரூபிக்க முடியாமல் போனாலும் பூமியிலும் பிரபஞ்ச அளவிலும் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகளை விளக்கவும் ஒருங் கிணைக்கவும் கூடிய ஒரு துணிவை அவருடைய சித்தாந்தம் தந்தது.

பௌதிகப் பிரபஞ்சத்துக்கும் ஆன்மிகப் பிரபஞ்சத்துக்கும் இடையில் ஒரு வரையறை இருந்தது. மேற்கண்ட முன்னேற்றங்களெல்லாம் அந்த வரையறையை மாற்றியமைத்ததையும் தெளிவுபடுத்தியதையும் நம்மால் உணர முடியும். கொஞ்சம்கொஞ்சமாக, அரிஸ்டாட்டிலின் ‘புனிதப் புவியிய'லின் இடத்தை மேலும் நுட்பமான, அருவமான உலக வரைபடம் ஆக்கிரமித்துக்கொண்டது.

இந்த வரைபடத்தில் பௌதிக உலகம் இருக்கிறது. எலெக்ட்ரான்கள், அணுக்கள், ஒளி, வெப்பம், மூளைகள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய பருப்பொருட்கள்-ஆற்றல்கள் எல்லாம் இந்த வரைபடத்தில் அடக்கம். பரந்துவிரிந்த இந்தப் பிரபஞ்சம் அறிவியல் ஆய்வுகளுக்கும் கணித விதிகளுக்கும் உட்படுத்தக் கூடியதாக இருந்தது.

இந்த பௌதிகப் பிரபஞ்சத்துடன் இணையாக இருப்பது ஆன்மிகரீதியிலான பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சம் அளவிட முடியாதது, இடம் சாராதது, அணுக்களாலோ மூலக்கூறுகளாலோ உருவாகாதது.ஆனால், அதில் நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை எங்கும் நிறைந்திருப்பது அது. இந்த இரண்டு பிரபஞ்சங்களும் எண்ணற்ற, முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனாலும், அறிவியலின் களம் என்பது பௌதிகப் பிரபஞ்சம்தானே தவிர, ஆன்மிகப் பிரபஞ்சம் அல்ல. இந்தப் பிரபஞ்சம்குறித்து அறிவியலால் எண்ணற்ற விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், ஆன்மிகப் பிரபஞ்சம்குறித்து அதனால் எதையும் சொல்ல முடியாது. பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ‘பெருவெடிப்பு' (பிக் பேங்) நிகழ்ந்த ஒரு நுண்விநாடிக்கும் (நானோசெகண்ட்) குறைவான கால அளவு வரை எட்டிப்பார்க்க அறிவியலால் முடியும்.

ஆனால், பிரபஞ்சம் ஏன் உருவானது, அதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியலால் பதில் சொல்ல முடியாது.

அறிவின் சில பகுதிகள் மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது என்ற எண்ணம் எல்லா உணர்வுகளை யும்போல நம் ஆழ்மனதில் உறைந்துகிடக்கிறது. அதை நமது பிரக்ஞையிலிருந்து அவ்வளவு எளிதாக வெட்டியெறிந்துவிட முடியாது. மேரி ஷெல்லியின் புகழ்பெற்ற ‘ஃப்ராங்கென்ஸ்டைன்' நாவலில் (1818) இப்படி வரும்: “அறிவைப் பெறுதல் என்பது எவ்வளவு ஆபத்தானது. தனது இயல்பு அனுமதிக்கும் அளவையும் கடந்து மிகப் பெரிய உயரத்தை அடைய நினைப்பவனைவிட, தான் இருக்கும் ஊர்தான் உலகம் என்ற நினைப்பில் வாழும் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியானவன்!”

அழிவுக்கான ஆக்கமா?

நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டுச் சோதனையை அமெரிக்கா நடத்தியபோது வெளிப்பட்ட பயங்கரம் என்பது, நம் இயல்பைவிட அதீதமான சக்திகளை நாம் கட்டவிழ்த்துவிட்டோம் என்பதற்கான அடையாளமே. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் அணுகுண்டுத் தயாரிப்புத் திட்டத்தின் (மன்ஹாட்டன் புராஜெக்ட்) தலைவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர், “அப்போது நாங்கள் புரொமிதியஸ் கதையைப் பற்றியும் மனிதனின் புதிய சக்திகள்குறித்த ஆழமான குற்றவுணர்வைப் பற்றியும் நினைத்துக்கொண்டோம்” என்றார்.

படியாக்கத்தின் (குளோனிங்) மூலம் டாலி என்ற ஆட்டை உருவாக்கியபோது, “நவீன வாழ்க்கையின் மதிமயக்கக்கூடிய கதவுகள் திறந்துபார்க்கக் கூடாதவை என்று மூடப்பட்டிருந்தன. அந்தக் கதவுகளைத் திடீரென்று திறந்து, ரகசியங்களை எட்டிப்பார்த்ததுபோல இருக்கிறது” என்று ‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை எழுதியது.

திறக்கப்படும் ஒவ்வொரு கதவும் தொடர்ந்து நமக்கு உறுத்தலையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தக்கூடும். நாம் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் ஆதிவாசிகளாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறோம். நியூட்டனின் சிந்தனைப் பாய்ச்சலும் நாமே, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்ட புரொமிதியஸும் நாமே. டி.என்.ஏ-வின் ரகசியங்களைக் கட்டவிழ்த்துவிட்ட வாட்சன்–கிரிக்கும் நாமே, ஆதாம்-ஏவாளும் நாமே.

பல நூற்றாண்டுகளின் விடுதலை உணர்வும் சிறைவாசமும் படைப்புத்திறனும் பயங்கரமும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கின்றன. திறக்கும் ஒவ்வொரு கதவும் நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்கும். இருப்பினும், தொடர்ந்து நாம் கதவுகளைத் திறந்துகொண்டிருப்போம்; ஏனெனில், நம்மை யாராலும் எதனாலும் தடுக்கவே முடியாது.

© ‘நியூயார்க் டைம்ஸ்', தமிழில்: ஆசை
(மார்ச் - 20, நியூட்டன் நினைவு நாள்)

தி இந்து